தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டியில் திருவிழா போன்று பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 542 காளைகள், 401 வீரர்கள் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தனர். ஆனாலும் போட்டியில் 530 காளைகள், 285 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இன்று காலை 7.15 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் போட்டு நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வாஷிங்மிஷின், ப்ரிட்ஜ், பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் குடம், குவளை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.
போட்டியில் காளையை அடக்க முயன்ற 7 வீரர்கள், 10 காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 25 காயமடைந்தனர். இதில் 9 பேர் உள்நோயாளிகளாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மாலை 4.30 மணி வரையில் போட்டி நடைபெற்றது. வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் நித்யா தலைமையில், பாதுகாப்பு பணியில் சுமார் 700 போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
படங்கள்: ஆர் வெங்கடேஷ்