அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். இதன் பின் நடைபெறும் 2 கி.மீ ரோடு ஷோ மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக களமாடி வருகிறது. இதற்காக தேசிய ஜனநாயக கட்சிக் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.
இக்கூட்டணியைத் தோற்கடிக்க 24 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க இந்தியா முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்டமாக மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இன்று வருகிறார். அங்கு வழிபாடு நடத்திய பின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி அயோத்தியில் 2 கி.மீ நடைபெறும் ரோடு ஷோவில் பிரதமர மோடி கலந்து கொள்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பாஜக செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள இட்டாவா மற்றும் தௌராஹாரா ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார். இதன்பின் பிற்பகல் 2.45 மணியளவில் இட்டாவாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார், அதன் பிறகு அவர் துராஹாராவுக்குச் செல்கிறார், அங்கு மாலை 4.45 மணியளவில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ன. விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.