ஈஷா யோகா மையத்தில் காணாமல் போன இளம்பெண் கொலை?: 14 நாளைக்குப் பின் கிணற்றில் சடலமாக மீட்பு

சுபஸ்ரீ.
சுபஸ்ரீ.

ஈஷா யோகா மையத்தில் காணாமல் போன இளம்பெண் 14 நாட்களுக்குப் பிறகு கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(34). ஒரு பனியன் கம்பெனியில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் டிச.11-ம் தேதி காலை கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்திற்கு ஒரு வாரகால பயிற்சிக்கு சுபஸ்ரீ சென்றார்.

இதன் பயிற்சி முடிந்து டிச.18-ம் தேதி வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர் டிச.20-ம் தேதி வரை வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது கணவர் பழனிக்குமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்," கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக எனது மனைவி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒரு வார யோகா பயிற்சியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அதேபோல் டிச. 11-ம் தேதி மீண்டும் அதே வகுப்பில் கலந்து கொள்ள எனது மனைவியை காலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டுச் சென்றேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிச.18 -ம் தேதி அன்று காலை 11 மணிக்கு வகுப்பு முடிந்து மனைவியைக் கூட்டிச் செல்வதற்காக காலை 7 மணிக்கே ஈஷா யோகா மையத்தில் வந்து காத்திருந்தேன். ஆனால், 11 மணியைத் தாண்டியும் எனது மனைவி வெளியே வரவில்லை. இதனால் உள்ளே சென்று விசாரித்தேன். ஆனால், காலையிலேயே வகுப்பு முடிந்த பிறகு அனைவரும் சென்றுவிட்டனர் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சர்ப்பவாசல் வழியாக ஒரு காரில் சுபஸ்ரீ லிப்ட் ஏறிச் செல்வது தெரியவந்தது.

இந்த நிலையில், ஒரு செல்போனில் இருந்து எனது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. பிறகு அந்த நம்பருக்குத் திரும்ப அழைத்தேன். அதில் பேசிய நபர், ஒரு பெண் எனது கணவருக்கு பேச வேண்டும் என்று என்னுடைய போனை வாங்கி ஃபோன் செய்தார், ஆனால், அழைப்பை எடுக்காததால் செல்போனை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்தார். எனது மனைவி எங்கு சென்றார் என்று தெரியவில்லை. எனவே, எனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சுபஸ்ரீயை தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், எந்த தகவலும் கிடைக்காததால் தனிப்படை அமைத்து சுபஸ்ரீயைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்,செம்மேட்டை அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக இன்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார். தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அவர் வெள்ளை நிற உடை அணிந்திருந்ததால் அண்மையில் ஈஷா யோகா மையத்திலிருந்து காணாமல் போன சுபஸ்ரீயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரின் கணவர் பழனிக்குமாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மோதிரம், கையில் இருந்த ஈஷா யோக அடையாள பட்டை மூலம் சடலமாக மீட்கப்பட்டது சுபஸ்ரீ தான் என அவரது கணவர் பழனிக்குமார் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சுபஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ஆலாந்துறை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஷா யோகா மையத்தில் காணாமல் போன இளம்பெண் 14 நாட்கள் கழித்து கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in