25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் கண்டுபிடிப்பு: இறந்ததாக 7 ஆண்டு திதி கொடுத்த குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீர்

டேவிட் துரைராஜ்க்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
டேவிட் துரைராஜ்க்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தொழிலில் நஷ்டம், குடும்ப பிரச்சினை காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரைக் கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் கரங்கள் அமைப்பினருக்கு, உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சென்னை தாம்பரம் சானிடோரியம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சாலையோரம் வாழ்ந்து வருவதாக காவல்துறையின் காவல் கரங்கள் அமைப்புக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற காவல் கரங்கள் அமைப்பினர், அந்த நபரைக் கண்டறிந்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் டேவிட் துரைராஜ் என்பதும், அவர் கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் டேவிட் துரைராஜ், 25 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்ததும், இறுதியாக தாம்பரம் சானிடோரியம் பகுதியில் தங்கி குப்பையில் உள்ள பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமன்றி சிறிது மன நலம் பாதிக்கப்பட்ட டேவிட் துரைராஜ், குப்பைகளை எடுப்பதற்காக சக்கரங்கள் கொண்ட ஒரு பிரத்யேக வாகனத்தை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பகுதியில் இருந்து குப்பைகளை எடுத்து விற்பனை செய்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவரை மீட்ட காவல் கரங்கள் அமைப்பினர் காப்பகத்தில் சேர்த்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்கினர். இதன் பின், கோவில்பட்டியில் உள்ள டேவிட்டின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து விசாரித்தனர்.

அப்போது, திருமணமான டேவிட்டுக்கு மகாலட்சுமி(25) என்ற மகளும், கார்த்திக் (24) என்ற மகனும் இருப்பதும் தெரிய வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட டேவிட் துரைராஜ், குடும்ப பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறி 1997-ம் ஆண்டு சென்னைக்குச் சென்றுள்ளார். வெகுநாட்களாகியும் டேவிட் வராததால் அவரைத் தேடி வந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், கடந்த 2004-ம் ஆண்டு வந்த சுனாமியில் சிக்கி டேவிட் துரைராஜ் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதியுள்ளனர். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக டேவிட் துரைராஜ்க்கு அவர்கள் திதி கொடுத்து வந்துள்ளனர். மேலும் காணாமல் போன டேவிட் மறைந்த முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான பி.எச் பாண்டியனின் அண்ணன் மகன் என்ற தகவல் கேள்விப்பட்டு காவல் கரங்கள் அமைப்பினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் லோகநாதன் முன்னிலையில் காவல் கரங்கள் அமைப்பினர் மூலம் மீட்கப்பட்ட டேவிட் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டார். அவரது அடிப்படை தேவைக்கான உடை உள்ளிட்ட உதவிப் பொருட்களை டேவிட்டுக்கு கூடுதல் ஆணையர் லோகநாதன் வழங்கி அவருக்கு வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தார். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை எனவும், ஒருமுறை தோற்றாலும் ஊருக்குச் சென்று குடும்பத்தாருடம் மீண்டும் தொழில் செய்வேன் என டேவிட் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. காவல் கரங்கள் அமைப்பிற்கு டேவிட் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in