
ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ். ரகுபதி பேசுகையில், " மாவட்டத்திற்கு ஒரு சட்ட கல்லூரி அமைக்கப்படும். சைபர் குற்றம், இணையவழி குற்றம், பொருளாதார குற்றம், வணிக குற்றம் நடைபெறும் நிலையில் அதற்கேற்ப சட்ட கல்லூரியில் பாடங்களை அமைத்து அக்குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இன்று யார் வேண்டுமானாலும் சட்டம் படிக்கலாம் என்கிற அளவிற்கு சட்ட கல்லூரிகள் உள்ளது" என்றார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக மத்திய சட்ட அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதுகுறித்து ஆளுநர் விளக்கத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.