
40 ஆண்டு கால வரலாற்றில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே நாககுடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023- 2024 -ம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, சர்க்கரை துறை முதன்மை செயலாளர் விஜயராஜ்குமார் உள்ளிட்ட வேளாண் துறையைச் சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்துறை வசதிகளையும், தங்கள் குறைகளையும் கூறி கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தஞ்சாவூர் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ``விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ற பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது.
விவசாயிகள் மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து நல்ல எண்ணம், ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது. தமிழக முதலமைச்சர் விவசாயத்தில் காட்டும் ஆர்வம் காரணமாக நெல் உற்பத்தியில் 40 ஆண்டு வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது'' என்றார்.