கராச்சியில், ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 குழந்தைகள் உள்பட 18 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். சிந்துவின் ஜாம்ஷோரோ மாவட்டத்தில் உள்ள நூரியாபாத் அருகே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
திடீரென இந்த பேருந்து தீப்பிடித்தது. இதனால் பேருந்து முழுவதும் புகை பரவியது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். புகையால் மூச்சுத்திணறல் ஏற்படவும், பேருந்து தீப்பிடித்த விவரம் அவர்களுக்குத் தெரிய வந்தது. இதனால் பேருந்து கண்ணாடியை உடைத்து சில பயணிகள் தப்பித்தனர். ஆனாலும், பேருந்து முழுவதும் தீ பரவியதில் அதில் இருந்த 8 குழந்தைகள் உள்பட 18 பேர் உடல் கருகி பலியானார்கள். தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் ஜம்ஷாரோ என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கராச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.