மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காவிரி டெல்டா பாசனத்திற்காகப் பயன்படும் மேட்டூர் அணை இன்று மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து  அதிக மழையைத் தந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள்  முழுவதும் வெள்ளக்காடாக  மாறியுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் இந்த கனமழையால்  கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நிரம்பி விட்ட நிலையில் கர்நாடகத்தின் உபரி நீர் முழுவதும் அப்படியே தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதனால்  மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின்னர் அணைக்கு  வந்த மொத்த நீரும் அப்படியே திறக்கப்பட்டு கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டது. அப்படி மூன்று முறை சுமார் 300 டிஎம்சி அளவிற்கு உபரி நீர் கடலில் கலந்து வீணாகியது. இதனால் கொள்ளிடம், காவிரி  ஆற்றின் கரையோர கிராமங்கள் பலவும் வெகுவாக பாதிக்கப்பட்டன.

அண்மைக்காலமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து இருந்ததால் தமிழக பகுதிகள் வெள்ள அபாயம் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தன. இந்த நிலையில் நேற்று முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 20,000  கன அடியாக இருந்த மேட்டூர் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 28 ஆயிரம் கன அடியாகியுள்ளது. நேற்று 119.40 அடியாக இருந்த மேட்டூர் அணை இன்று முழுவதுமாக நிரம்பி 120 அடியை எட்டியது. அதனையடுத்து அணைக்கு வரும் மொத்த நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியும்,  பதினாறு கண் மதகுகள் வழியாக 5000 கன அடி நீரும்  வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  மேட்டூருக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்தால் முன்பு  போலவே கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றின் கிராமங்கள் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும்  வாய்ப்புள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in