காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக சூறாவளியாக மாறும்: வானிலை மையம் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக சூறாவளியாக மாறும்: வானிலை மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து சூறாவளியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பரவலாகக் கன பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான வயல்வெளிகள் நீரில் மூழ்கின. அப்பகுதியில் நிவாரணப் பணிகள் தொடங்கியுள்ளது. அதுபோல் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, இன்றும் நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மேலும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதியிலும் சூறாவளிக் காற்று வீசும். இதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in