காலையில் திருமணம்; இரவில் ஓட்டம் பிடித்த மணமகன்: மணமகள் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு

திருமணம்
திருமணம்காலையில் திருமணம்; இரவில் ஓட்டம் பிடித்த மணமகன்: மணமகள் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு

காலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் அருகே உள்ள உச்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடலூர் மாவட்ட நீதித்துறையில் தொழில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று காலை சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்திற்கு முன்தினமான நேற்று முன்தினம் மாலை மணமக்களின் உற்றார் உறவினர் திருமண மண்டபத்துக்கு வந்திருந்தனர். மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் அனைவரிடத்திலும் ஆசி பெற்றனர். பின்னர் இரவு 12 மணி வரை மணமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தநிலையில், அதிகாலை யாரிடமும் சொல்லாமல் மணமகன் தலைமறைவானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மணமகன் கிடைக்காததால் மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, மணமகள் வீட்டார் தங்கள் உறவினர் மகன் இளவரசனை மாற்று மாப்பிள்ளையாக தேர்வு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, சிதம்பரம் காவல்நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். காவல்துறையினர் முன்னிலையில் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுகளை ஓடிப் போன மணமகன் வீட்டார் தர, அவர்கள் அதை பெற்றுக் கொண்டனர். இதேநேரத்தில் தலைமறைவான ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in