மருத்துவ பரிசோதனையில் அம்பலமான குழந்தை திருமணம்; சிறுமி 5 மாத கர்ப்பம்: 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு

மருத்துவ பரிசோதனையில் அம்பலமான குழந்தை திருமணம்; சிறுமி 5 மாத  கர்ப்பம்: 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு

தென்காசியில் சிறுமி 5 மாத கர்ப்பமான வழக்கில் கணவர் உள்பட 5 பேர் மீது போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகில் உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் அய்யன்குமார்(29) இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது அந்தச் சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். அவர் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்றார்.

அப்போது அரசின் ஆவணக்குறிப்பிற்காக அவரது வயது சான்றிதழைப் பெற்றபோதுதான் 17 வயதிலேயே அந்தச் சிறுமிக்கு திருமணம் ஆகியிருப்பது தெரியவந்தது. மைனர் பெண்ணுக்குத் திருமணம் நடந்து, கர்ப்பமாகவும் இருக்கும் தகவலை வாசுதேவநல்லூர் ஒன்றிய ஊர்நல அலுவலர் முத்தாள் புளியங்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் இருகுடும்பத்தினரின் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் கணவர் அய்யன்குமார், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது குழந்தைத் திருமணம், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குப் பின்பு வழக்கு நடவடிக்கை பாய்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in