
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் காரணமாக ஒரு தலைமுறைக்கும் மேலாக வாக்குச்சாவடிகளையே மறந்திருந்த மக்கள், முதல்முறையாக தேர்தல் திருவிழாவுக்கு தயாராகிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் கோட்டத்தை சேர்ந்த 50 கிராமங்கள் தீவிர மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருந்து வந்தன. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் காரணமாக இப்பகுதி வாக்குச்சாவடியில் பணியாற்ற அரசு ஊழியர்கள் எவரும் முன்வராததோடு, அச்சம் காரணமாக வாக்காளர்களும் தேர்தலை புறக்கணித்து வந்தனர். இந்த வகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ்தர் மாவட்டத்தின் இந்த கிராமங்கள் தேர்தல்கள் எதையும் சந்திக்காது இருந்தன.
ஒரு தலைமுறை காலத்துக்கும் மேலாக இங்கே தேர்தலை பார்க்காதவர்கள் அதிகம். ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. மாவோயிஸ்ட் ஆளுகைக்கு உட்பட்ட இந்த கிராமங்களில் இம்முறை தேர்தல் நடத்தியே தீர்வது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக மாநில அரசு மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளுடன் சேர்ந்து திட்டங்கள் தீட்டியது. முதல்கட்டமாக மாவோயிஸ்டுகள் அப்பகுதியிலிருந்து களையெடுக்கப்பட்டனர். அடித்தபடியாக வாக்களிக்க வரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டன.
பஸ்தர் கோட்டத்தின் 7 மாவட்டங்களை சேர்ந்த கிராமங்களில், 60க்கும் மேலான முகாம்கள் அமைத்து பாதுகாப்பு படையினர் மக்களின் நம்பிக்கையை பெற்று வருகின்றனர். உள்ளூர் போலீஸார் மட்டுமன்றி, டிஆர்ஜி, எஸ்டிஎஃப், கோப்ரா, சிஆர்பிஎஃப், ஐடிபிபி என நாட்டின் அனைத்து பாதுகாப்பு படையினரும் இந்த கிராமங்களில் தற்போது அணி திரண்டுள்ளனர். மக்களின் கூடுதல் பாதுகாப்புக்காக வீடு - வாக்குச்சாவடிக்கு இடையிலான தொலைவை குறைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் உருவான வாக்குச்சாவடிகளில் முதல்கட்டமாக 120 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்று திறந்து வைக்கின்றனர். பாதுகாப்பு படையினர் வழக்கமான முகாம்கள், தீவிர ரோந்துகள் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 7 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் கட்டத்தேர்தலின் அங்கமாக பஸ்தர் பகுதியின் மாவோயிஸ்ட் கிராமங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வாக்களிக்கப்போவதால், இப்பகுதி வாக்காளர்கள் உற்சாகமாக உள்ளனர். அசம்பாவிதம் ஏதுமின்றி இப்பகுதியின் வாக்குப்பதிவை நடத்தி முடித்தால், அது தேர்தல் ஆணையத்தின் சாதனைகளில் ஒன்றாக சேரும்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!
தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!
இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!