
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா கோலாகலமாக துவங்கியது. பிச்சாண்டவராக பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா வரும் சிவனுக்கு மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் பரவசம்.
63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியார் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இங்கு, அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இத்திருவிழா துவங்கப்பட்ட நிலையில் நேற்று பரமதத்தர் - புனிதவதி திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை பிச்சாண்டவருக்கு மாங்கனி இறைத்தல் நிகழ்வு தொடங்கியது.
பிச்சாண்ட மூர்த்தியாக சிவபெருமான் காரைக்கால் வீதியில் பவளக்கால் சப்பரத்தில் உலா வந்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் மாங்கனிகளை ஏந்தி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமண வரம் வேண்டுவோர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தர வேண்டி இறைவனை நோக்கி மாங்கனிகளை இறைத்தனர். இவ்வாறு வீசப்பட்ட மாங்கனிகளை, பிரசாதமாக பெறுவதற்காக வீதியுலாவில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாங்கனிகளை எடுத்து சென்றனர்.