வேகத்தைக் குறைத்து கொண்ட 'மாண்டஸ்': புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மாற்றம்!

வேகத்தைக் குறைத்து கொண்ட 'மாண்டஸ்': புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மாற்றம்!

வானிலை மையம் முன்பே கணித்ததை விட 'மாண்டஸ்' புயலின் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதால், கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றது. ‘மாண்டஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரைக்காலுக்கு 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது.

தீவிரமெடுக்கும் 'மாண்டஸ்' புயல் காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் படகுகளை நன்கு கட்டிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இன்றும், நாளையும் கடலோர சாலைகளிலும்,  கிழக்கு கடற்கரைச் சாலையிலும்  பயணம் செய்வதைப் பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் புயலைச் சமாளிக்க பொது மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாண்டஸ் புயலின் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதால், புயல் கரையைக் கடப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயலின் நகரும் வேகம் மணிக்கு 6.கி.மீட்டராக குறைந்துள்ளது. நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 'மாண்டஸ்' கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது மேலும் தாமதமாகி நாளை நள்ளிரவு கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது புதுச்சேரி, வடதமிழகம், தென் ஆந்திர பகுதிகளில் சுமார் 85 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் மிகக் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in