காதல் திருமணம் செய்த மகனைக் குத்திக்கொன்ற தந்தை: தடுக்க வந்த தாயையும் கொன்றார்

ஊத்தங்கரை அருகே இரட்டக்கொலை
ஊத்தங்கரை அருகே இரட்டக்கொலை காதல் திருமணம் செய்த மகனைக் குத்திக்கொன்ற தந்தை: தடுக்க வந்த தாயையும் கொன்றார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகனை, அவரது தந்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்தார். தடுக்க வந்த தாயையும் வெட்டிக்கொன்ற   சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி  கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி.  இவரது மகன் சுபாஷ் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருடன் வேலை பார்த்த ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அனுசுயாவை திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்ட சுபாஷுக்கு அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தந்தை  தண்டபாணி சம்மதம் தரவில்லை.

இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி  கடந்த மார்ச் 27-ம் தேதி சுபாஷ், அனுசுயா காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த தண்டபாணி மகனையும் மருமகளையும் வீட்டுக்கு வர வைத்துள்ளார். நேற்று இரவு உணவு அருந்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்களைக் கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு  அதை தடுக்க வந்த தனது தாய் கண்ணம்மாளையும் அரிவாளால் வெட்டினார். 

இதில் மகன் சுபாஷ், தாய் கண்ணம்மாள் ஆகியோர்  அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மருமகள் அனுசுயாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீஸார், சுபாஷ் மற்றும் கண்ணம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தண்டபாணியை  கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதல் திருமணம் செய்த மகனை தந்தையே ஆணவக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in