தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்ட வந்த கும்பலிடம் இருந்து மகனைக் காக்கப் போராடிய தந்தை வெட்டுப்பட்டு பலியானார். இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கொலைக்கான காரணம் குறித்து இன்று வாக்குமூலம் கொடுத்தனர்.
தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட மூன்று செண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(41). இவர் அழகேசபுரம் பகுதியில் நேற்று இரவு தனது 14 வயது மகனுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ்(24) என்ற வாலிபர் 14 வயது மகனை தன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டவந்தார். இதை மாரிமுத்து தடுக்க முயன்றார். அப்போது அவர் மீது சரமாரியாக வெட்டு விழுந்தது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மாரிமுத்துவின் உடல் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
போலீஸார் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், சிப்காட் பகுதியில் ஒளிந்து இருந்த முகேஷ்(23), தூத்துக்குடி சக்திநகரைச் சேர்ந்த பத்ரகாளிமுத்து(27), எஸ்.என்.ஆர் நகரைச் சேர்ந்த ஜெயலிங்கம்(25) ஆகிய மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். முத்துமீரான், இன்பராஜ், கண்ணன் ஆகிய மூவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரிடம் முகேஸ் கொடுத்த வாக்குமூலத்தில், “போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக 14 வயது சிறுவனோடு மோதல் ஏற்பட்டது. அதனால் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். 14 வயது சிறுவனைக் கொலை செய்ய வந்து, தந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.