இன்று மகாகவி நாள்: பாரதி சிலைக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

இன்று மகாகவி நாள்: பாரதி சிலைக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று 'மகாகவி நாள்' ஆக தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகிறது.

மகாகவி பாரதியார் 1882-ல் திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். தனது சிறு வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகவும், 1904-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரை “சுதேச மித்திரன்” பத்திரிகையிலும் பணியாற்றினார். இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 செப்டம்பர் 11-ம் நாள் மறைந்தார்.

மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளாகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளானலும் உயிரோட்டமாக இருக்கின்றன.

பேரறிஞர் அண்ணாவால், 'மக்கள் கவி' என்று அழைக்கப்பட்டார் மகாகவி பாரதியார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் நாட்டுடைமையாக்கி, நினைவில்லமாக மாற்றினார். 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லம் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11, 'மகாகவி நாள்' ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும். அதன்படி
தமிழக அரசின் சார்பில் மகாகவி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இதில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in