மகளை காணவில்லை; நீதிமன்றத்தில் பெற்றோர் கண்ணீர்: ஆன்லைன் விளையாட்டால் நீதிபதிகள் வேதனை

மகளை காணவில்லை; நீதிமன்றத்தில் பெற்றோர் கண்ணீர்: ஆன்லைன் விளையாட்டால்  நீதிபதிகள் வேதனை

‘ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் வெவ்வேறு பெயர்களில் வருவதால் ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது’ என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் மகள் இதாஸ் செலானி வில்சன் (19). நாகர்கோவில் பெண்கள் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவரை செப்டம்ப் 6-ம் தேதி முதல் காணவில்லை. கன்னியாகுமரி சவேரியார்புரம் சுனாமிகாலனியைச் ஜெப்ரின் என் மகளை கடத்தியுள்ளார். மகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மகளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். அதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், இளம் பெண்ணை கடத்தியதாக கூறப்பட்ட நபர், இளம் பெண்ணை மேலும் தொந்தரவு செய்யக்கூடாது. மீறினால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் மேலும் கூறுகையில், "இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் உள்ளனர். தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையங்களில் அந்த விளையாட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. ஃப்ரீபயர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போன்ற காட்சிகளெல்லாம் வருகிறது. இவை குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுகிறது" என கருத்து தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in