
மதுரை - போடி அகல ரயில் பாதைத் திட்டப்பணிகளை தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், மோட்டார் டிராலி மூலம் ஆய்வு செய்தார்.
மதுரை - போடி இடையே 90 கிமீ தூர அகல ரயில் பாதை திட்டம் ரூ.592 கோடி மதிப்பில் நிறைவேறப்பட்டுள்ளது. தேனி - போடி 15 கிமீ அகலரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்தது. இத்தடத்தில் 8 பெரிய பாலங்கள், 184 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இப்பாதையில் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மோட்டார் டிராலி மூலம் ஆய்வை துவக்கினார். தேனி ரயில்வே ஸ்டேஷனில் தேனி-போடி இடையே ரயில் இயக்க பொருத்திய ரயில்கள் ஆபரேஷன் பிளாக் இன்ஸ்ட்ருமென்ட் தொடு திரை ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
இத்தடத்தில் உள்ள பாலங்கள், ரயில் பாதை வளைவுகள், மின் தட குறுக்கீடுகள், நீர்வழி கீழ் பாலங்கள், போடி - புதூர் ரயில்வே கேட் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். அவருடன் தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே. குப்தா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்பட பலர் உடன் சென்றனர். போடியில் இருந்து ரயில் பெட்டிகளுடன் புறப்பட்ட அதிவேக சோதனை ஓட்ட ஆய்வு ரயில் 9 நிமிடத்தில் தேனி வந்தடைந்தது.