தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைன் மூலமாக நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசும், மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு மருத்துவர்கள். நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவர்கள்.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர். மருத்துவ கவுன்சில் வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவரிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம்போல் அதை பயன்படுத்தி வருவதாகவும், கடந்த மூன்று தேர்தல்களில் இதே நடைமுறையை பின்பற்றி தகுதியான வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளார்கள்.
வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதால், ஜனவரி 19-ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19 ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இந்த வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.