ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் ஆளுநருக்கு எதிராக வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் ஆளுநருக்கு எதிராக வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ள நிலையில், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால்,  எந்த தகுதியின் அடிப்படையில்  ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 அவரது மனுவில், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால் அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கிறார். இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது. அதனால்  ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியற்றவர்  ஆகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில்,  ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானது தான் என்றும், தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும் என  வாதிடப்பட்டது.

மேலும், ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா என விளக்கமளிக்க வேண்டும் எனவும், சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் எனவும் வாதிடப்பட்டது. பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப் பட்டன.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில்,  இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in