சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக வசூலித்த தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மிலாப் தளத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக வசூலித்த 30 லட்ச ரூபாயை கோயில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்கக்கோரி யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான கார்த்திக் கோபிநாத் தரப்பு வழக்கறிஞர் ராகவாச்சாரி, கோயிலின் திருப்பணிக்காக பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் வழங்குவதற்கு சட்டத்தில் தடையில்லை என தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சிறுவாச்சூர் கோயிலின் சிலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதால் இந்த பணம் தேவையில்லை என கூறினார்.
கோயில் சீரமைக்கப்பட்டுவிட்டால் வசூலிக்கப்பட்ட தொகையை வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதற்காக அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பணம் வசூலித்தது தொடர்பான விவகாரத்தின் விசாரணை நிலுவையில் உள்ளதால் பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது என அரசு தரப்பில் மீண்டும் கூறப்பட்டது. கோயிலின் திருப்பணிகளுக்கென குழு இருக்கும் போது நீங்கள் ஏன் மிலாப் மூலம் பணம் வசூலித்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, நன்கொடையாளர்கள் விவரத்தை தாக்கல் செய்ய மிலாப் தளத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்