சாலை வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாலை வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருக்கும் மனுவில், 'கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதால் ஏராளமான விபத்துகள் நடக்கிறது. 2016 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் நடந்த 715 விபத்துக்களில் 169 பேர் பலியாகியுள்ளனர். 

திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் இந்த சாலையில் சர்க்கரை ஆலைகள் உள்ளதால் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தும் அதிகமாக இருப்பதால் இதனை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்ட போதும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. சாலையை தரம் உயர்த்தும்பட்சத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கான பயண நேரம் இரண்டரை மணி நேரம், 45 நிமிடங்களாக குறைந்து விடும்.

நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் திட்டத்துக்கு  ஒப்புதல் அளித்தபோதும், மத்தியிலும், மாநிலத்திலும் இரு வேறு கட்சிகள் ஆட்சியில் இருப்பதால், திட்டத்தை அமல்படுத்துவதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது சம்பந்தமாக மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து, இச்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும்' என அவரது மனுவில்  கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை  இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in