
புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன் தேர்வான போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை 2003 ஏப்.1-ம் தேதி முதல் தமிழக அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், கடந்த 2002-ம் ஆண்டு பணிக்கு தேர்வான தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் தொடரும்படி உத்தரவிடக்கோரி சிவசக்தி உள்பட 25 போலீஸ்கார்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
2002-ம் ஆண்டு 3,500 போலீஸ்காரர்கள் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டதாகவும், இத்தேர்வு நடைமுறைகளின் படி தேர்வான தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
2002-ம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் துவங்கியிருந்தாலும், 2003 நவம்பர் மாதம் தான் மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், புதிய ஓய்வூதிய திட்டம் தான் அவர்களுக்கு பொருந்தும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டப்பலன்களைப் பெற அவர்களுக்குத் தகுதியில்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலர்கள், ஓராண்டிற்குள்ளாகவே பணிநியமனம் வழங்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன் பெறும் நிலையில், அதே காலக்கட்டத்தில் தேர்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் போலீஸ்காரர்களையும் சமமாக கருத வேண்டும் எனவும், ஆண் காவலர்கள் நியமனத்திற்கு 11 மாதம் தாமதத்திற்கு அவர்கள் காரணமல்ல என்பதால், அவர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். 12 வாரங்களில் இவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கும் நடைமுறையை முடிக்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.