உயர் நீதிமன்ற வக்கீல் சங்க தேர்தலில் மோதல்: சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு

உயர் நீதிமன்ற வக்கீல் சங்க தேர்தலில் மோதல்: சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்தல், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞர் சத்தியபால் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட க்யூ ஆர் கோடு  நடைமுறையில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து வெளியில் இருந்து சிலர் புகுந்ததால் தேர்தலை ரத்து செய்ய நேர்ந்ததாக கூறினார். உடனே வாக்குச்சாவடியை கைப்பற்றியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அமைதியாக இருக்கக்கூடாது என கூறினார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், தேர்தல் அன்று நடைபெற்ற பிரச்சினை தொடர்பாக அறிக்கை மற்றும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என  தெரிவித்தனர். மேலும், நிறுத்தப்பட்ட தேர்தலை விரைவில் நடத்தும் வகையில் புதிய தேதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பொங்கல் விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in