
தங்கள் மகளைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில் அவர் மணக்கோலத்தில் கணவருடன் வந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா ( 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று திருமணக் கோலத்தில் தனது கணவருடன் வடமதுரை காவல் நிலையத்தில் பிரியா தஞ்சமடைந்தார். போலீஸாரின் விசாரணையில் வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி ( 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என்பதால் மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாக அவர் தெரிவித்தார். அதையடுத்து வடமதுரை போலீஸார் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் இஷ்டப்படி வாழ அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை எடுத்துச் சொன்ன போலீஸார், அதனால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக் கொண்டனர். பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீஸார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.