பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முகாமில் தங்க வைக்கப்பட்ட 6 வயது சிறுமி உணவு கிடைக்காமல் நேற்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 200 குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிந்த் மாகாண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுக்கூர் நகரில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்து உள்ளனர். இதில், ஒரு பகுதியினர் பத்னி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இந்த முகாம்களில் உரிய உதவி கிடைக்கவில்லை. இந்த முகாமில் தங்கியிருந்த காலித் கோசோவின் 6 மகள் நிவாரண உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காலித் கோசோ கூறுகையில், " எங்களது குழந்தை பசியால் தவித்தபோது, ரோரி நகரில் உள்ள முக்தியார்கர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு சென்றோம். எங்களுக்கு உணவோ, கூடாரமோ வழங்கவில்லை. இந்த சூழலில் சிறுமி பசியாலும், நோயாலும் உயிரிழந்து விட்டார்" எனக் கூறினார்.
சிறுமி இறந்த சம்பவம் அறிந்த வெள்ளம் பாதிப்பால் பாதிக்கப்பட்ட 200 குடும்பத்தினர் சுக்கூர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முகாம் அதிகாரிகள் உணவு மற்றும் பிற நிவாரணப் பொருட்களை தேவையான நேரத்தில் கொடுக்காததால் சிறுமி உயிரிழந்து உள்ளதாக அவர் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், " கனமழை மற்றும் வெள்ளத்தில் அனைத்துப் பொருட்களும் அடித்து செல்லப்பட்டு விட்ட பின்னர், சுக்கூரில் இருந்து ஜகோபாபாத் மாவட்டத்திற்கு நாங்கள் வந்தோம். அதிகாரிகளின் உதவிக்காக காத்திருந்தோம். ஆனால், விவரங்களை சேகரிக்கவே வந்த அதிகாரிகள், எங்களுக்கு உணவு, கூடாரம், கொசு வலை மற்றும் பிற தேவையான நிவாரணப் பொருட்கள் எதையும் வழங்கவில்லை. இதனால், பசியால், நோயால் பாதிக்கப்பட்ட எங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைப் பாதுகாக்க முடியவில்லை" என கண்ணீருடன் கூறினர்.