`அசிங்கமாக திட்டினார்; சுத்தியலால் தாக்கினேன்'- திருநங்கையை கொன்ற லாரி ஓட்டுநர் வாக்குமூலம்

`அசிங்கமாக திட்டினார்; சுத்தியலால் தாக்கினேன்'- திருநங்கையை கொன்ற லாரி ஓட்டுநர் வாக்குமூலம்

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் திருநங்கையைக் கொலை செய்த லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(35). திருநங்கையான இவர் நேற்று இரவு ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகில் கடுமையாகத் தாக்கப்பட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். இதுகுறித்து அப்பகுதிவாசிகள் ரோந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் பிரபுவை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிர் இழந்தார்.

பெருமாள்புரம் போலீஸார் திருநங்கை பிரபு கொலை வழக்கை விசாரித்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம், திட்டங்குளத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமேஷ்குமார் என்பவர்தான் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ”ரெட்டியார்பட்டி சாலையில் நானும், லாரி டிரைவரும் இறங்கி டீ குடிக்கச் சென்றோம். அப்போது பிரபுவும், அவருடன் இருந்த திருநங்கைகளும் சேர்ந்து லாரியில் இருந்த 5 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துவிட்டனர். நான் போய் கேட்டபோது தரமறுத்தனர். ஒருகட்டத்தில் பிரபு என்னை அசிங்கமாக திட்ட ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, லாரியில் இருந்த சுத்தியலால் பிரபுவை தாக்கினேன். அவர் மயங்கியதும், நடிப்பதாக நினைத்து லாரியை எடுத்துவிட்டு வந்துவிட்டேன்” எனச் சொன்னார்.

5,000 ரூபாய் பணத்தை திருடியதாக திருநங்கை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in