கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி: தானம் தருபவரின் சகோதரர் புகாரை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி: தானம் தருபவரின் சகோதரர் புகாரை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

தானம் அளிப்பவரின் சகோதரர் புகார் தெரிவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லீரல் பாதிக்கப்பட்ட ஜஸ்பீர் சிங் என்பவருக்கு அவரது உறவினர் நரேஷ்குமார் சாகர், கல்லீரல் தானம் வழங்க முன் வந்தார். அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை உரிய ஆவணங்களை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.

அதைப் பரிசீலித்த குழு, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், மருத்துவமனைக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறி, நரேஷ்குமார் சாகரின் சகோதரர், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கடிதம் ஒன்றை மருத்துவமனை நிர்வாகத்துக்கு அனுப்பினார். இதையடுத்து அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்த மருத்துவமனை நிர்வாகம், அந்தப் புகாரை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஏற்கெனவே குழு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்படி மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி உறுப்பு தானம் செய்யும் நரேஷ்குமார் சாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழு அளித்த ஒப்புதலை, மூன்றாம் நபர் அளித்த ஆதாரமற்ற புகாரைக் கொண்டு ஒருபோதும் மறு ஆய்வு செய்யப்பட மாட்டாது எனவும், அறுவை சிகிச்சையை மருத்துவமனை மேற்கொள்ளலாம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, தானம் அளிப்பவரின் சகோதரர் அளித்த புகார் தடையாகவில்லை எனக் கூறி, மருத்துவத் தகுதி அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in