அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி திடீர் உத்தரவு: சுற்றறிக்கையில் இருப்பது என்ன?

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபுஅனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி திடீர் உத்தரவு: சுற்றறிக்கையில் இருப்பது என்ன?

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் இறுதிச்சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டுமென தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ அனைத்து மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், இறுதிச் சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பங்கேற்க வேண்டும்.

சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குநர் சார்பாக மலர்வளையம் வைத்து இறுதி மரியாதைகளைச் செய்ய வேண்டும் என்று அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அந்த காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும். இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை ரீதியாக  மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின் போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும் ’’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in