கேரளத்தில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் இடுக்கி மாவட்டமும் ஒன்று. இங்கு இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் மாயமான மூவரைத் தேடும்பணி நடந்துவருகிறது.
கேரளத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. பெருமழையின் காரணமாக இடுக்கி மாவட்டம் குடையத்தூர் பகுதியில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்குள்ள மாலியேக்கல் காலனியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சோமன் என்பவரது வீடு இடிந்து தரைமட்டமானது.
இதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் தங்கம்மா, பேரன் ஆதிதேவ் ஆகியோர் உயிர் இழந்தனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய சோமன், அவரது மனைவி சிஜி, மகள் ஷிமா ஆகியோர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது வீடும் முற்றாக சிதலமடைந்து, விழுந்துவிட்டதால் அந்த மூவரும் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்ததும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த தங்கம்மா, ஆதிதேவ் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாயமானவர்களைத் தேடும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. இதேபோல் கண்ணூர் பகுதியிலும் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.