
போக்சோ வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, புகார்தாரரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி பெண் காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளார்.
திருச்சி, லால்குடி, வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. அவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெகதீசன் மீது யுவராஜ் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்று விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், புகாரின் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காவல் நிலைய ஆய்வாளர் மாலதி இந்த வழக்கை விசாரணை செய்து வந்தார்.
இந்த வழக்கில் ஜெகதீசன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், அதனால் தனக்கு ரூ.5,000 லஞ்சமாக தர வேண்டுமென்று ஆய்வாளர் மாலதி, யுவராஜாவிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸாரின் ஆலோசனையின் பேரில் இன்று காலை காவல் நிலையம் சென்ற யுவராஜ் மாலதியிடம் 5 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மாலதியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் ஆய்வாளர் லஞ்சம் பெற்று கையும் களவுமாக பிடிபட்டிருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.