ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை முந்திரிக்காட்டில் தனிவீட்டில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் சாந்தி தம்பதியரின் மகன் ஜெயக்குமார் (22). கூலித் தொழிலாளியான இவர், 17 வயது சிறுமி ஒருவரை அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி பிளஸ் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்.
இந்த நிலையில், தன்னைக் காதலிக்குமாறு ஜெயக்குமார் அவரை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன் அந்த சிறுமியைக் கட்டாயப்படுத்தி தனது பைக்கில் கடத்திச் சென்று புதுக்குடி கரைமேட்டில் உள்ள முந்திரி காட்டில் தனி வீட்டில் வைத்து கடந்த பத்து நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது தாய் சாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.
தங்களின் மகளைக் காணாத அவரது பெற்றோர், இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் 10 நாட்கள் கழித்து தானாக வீட்டுக்கு வந்த சிறுமி, யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது ஜெயக்குமார் தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் சிறுமியைக் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஜெயக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சாந்தி இருவரையும் அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரித்தார். அப்போது அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் ஜெயக்குமார் மற்றும் அவரது தாய் சாந்தி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிறுமியைக் காதலிக்க வற்புறுத்தி கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் ஜெயக்குமாரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ஜெயக்குமாரின் தாய் சாந்தியையும் (45) போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து ஜெயக்குமாரை ஜெயங்கொண்டம் கிளைச் சிறையிலும், அவரது தாய் சாந்தியை திருச்சி காந்தி மார்க்கெட் பெண்கள் தனி சிறைக்கும் போலீஸார் அனுப்பி வைத்தனர். தாயார் உதவியுடன் மகன் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.