
தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி முறைப்படி இணைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பரபரப்பாக விவாதிக்கப்பட்ட பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முக்கிய கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். அதில், ”தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவெடுத்த மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியை வரவேற்கிறேன். முழு மனதுடன் அவர்களை வரவேற்கிறோம். இது கூட்டணியை மேலும் பலப்படுத்தும். புதிய இந்தியாவை நோக்கிய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு உறுதுணையாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை மதச்சார்பற்ற ஜனதா தலைவர் ஹெச்.டி.குமாரசாமி இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார். இந்த சந்திப்பில் தான் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பொறுத்தவரை கர்நாடகா மாநிலத்தில் தான் செல்வாக்கு பெற்று விளங்குகிறது. இந்த சூழலில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் அக்கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவர்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித் ஷா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறி எடியூரப்பா பரபரப்பை கிளப்பினார். ஆனால், இது உண்மையில்லை. கூட்டணி விவகாரமே இன்னும் பேச்சுவார்த்தை அளவில் தான் இருக்கிறது. அது உறுதி செய்யப்பட்ட பிறகு சீட் பேரம் நடைபெறும் என்று குமாரசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. ஏற்கெனவே சொன்னது போல 4 தொகுதிகள் மட்டும் தானா இல்லை கூடுதலாக வழங்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. எனவே, கடந்த முறை போட்டியிட்ட அதே 7 தொகுதிகளைக் கேட்பார்களா அல்லது அதில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.