`பெற்றோர் கேட்கவில்லை; கடத்தல் நாடகம் போட்டேன்'- 7-ம் வகுப்பு மாணவனின் வாக்குமூலத்தால் போலீஸ் அதிர்ச்சி

`பெற்றோர் கேட்கவில்லை; கடத்தல் நாடகம் போட்டேன்'- 7-ம் வகுப்பு மாணவனின் வாக்குமூலத்தால் போலீஸ் அதிர்ச்சி

தேர்வுக்கு பயந்து கடத்திவிட்டதாக நாடகம் போட்டு பெற்றோரையும் போலீஸாரையும் ஏமாற்றிய சிறுவனை போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஷர்மா(42) என்பவர் நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 12 வயது மகன் மிதிலேஷ் குமார் ஷர்மா கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும், வழக்கமாக ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் தனது மகனை பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வருவார் எனவும் இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் பள்ளி முடிந்த பின்பு ஆட்டோ ஓட்டுநர், மிதிலேஷை ஆட்டோ அருகே நிற்குமாறு கூறி விட்டு மற்ற மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி வளாகத்துக்குள் சென்றார்.

அந்தநேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மகன் மிதிலேஷைத் தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பச்சையப்பன் கல்லூரி சிக்னல் அருகே ஆட்டோ சென்றபோது சிறுவன் மிதிலேஷ் ஆட்டோவில் இருந்து குதித்து மெட்ரோ ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தப்பி வந்ததாகவும் அங்கிருந்த காவலர் ஒருவரிடம் செல்போனை வாங்கி தான் கடத்தப்பட்டது குறித்து தாத்தாவிற்கு தகவல் கொடுத்தேன் என்று தெரிவித்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.

மேலும் சிறுவன் மிதிலேஷ் பயந்து உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடத்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகாரில் கேட்டுக்கொண்டார்.

அதன் பேரில் போலீஸார் சிறுவன் படிக்கும் பள்ளி அருகே உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பச்சையப்பன் சிக்னல் அருகே இருந்த சிசிடிவி கேமராக்கள் முதலானவற்றில் பதிவான காட்சிகள் அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த இடத்தில் சிறுவன் கடத்தப்பட்டதற்கான எந்தவொரு தடயமும் போலீஸாருக்குத் தென்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் சிறுவனை அழைத்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.

7-ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருவதால், தேர்வுக்கு பயந்து பலமுறை பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் பெற்றோர் இதைப் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு அனுப்பி வைத்ததாகவும் விசாரணையில் சிறுவன் தெரிவித்தார்.

இதனால் கடத்தல் நாடகமாடினால் பள்ளிக்கு பெற்றோர் அனுப்பமாட்டார்கள் என திட்டம்போட்டு, பள்ளி முடிந்த பின்பு ஆட்டோ ஏறாமல் பேருந்து மூலமாக பச்சையப்பன் கல்லூரி சிக்னலுக்கு சென்றதும் பின்பு சிறிது நேரம் கழித்து அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த பயணி ஒருவரிடம் வீட்டிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என செல்போன் வாங்கி பேசியதாகவும் விசாரணையில் தெரிவித்தார்.

பின்னர் நாடகமாடிய சிறுவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் போலீஸார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in