
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டல் விடுத்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு, ஒரு செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப் வழியாக நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பினார். மேலும் இணையதளத்தில் அப்பெண்ணின் ஆபாச வீடியோவை பரப்பிவிடுவதாக பணம் கேட்டு மிரட்டவும் செய்துவந்தார். உடனடியாக அப்பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத்திடம் நேரடியாக புகார் மனு கொடுத்தார்.
இப்புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார். சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, மிரட்டிய நபரை கண்டறிந்தனர். பின்பு குற்றவாளியை பொறிவைத்து பிடித்தனர். அந்நபர் கேரளா மாநிலம் மூணார் பகுதியை சேர்ந்த இருளப்பன் என்பவர் மகன் ராஜ்குமார் (வயது 39) என்பதும் தற்போது மதுரையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. சைபர் கிரைம் காவல்நிலைய போலீசார் மதுரைக்கே சென்று ராஜ்குமாரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.