இரவில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: நாகர்கோவிலில் பதுங்கியிருந்த கேரள தலைமையாசிரியர் கைது!

இரவில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: நாகர்கோவிலில் பதுங்கியிருந்த கேரள தலைமையாசிரியர் கைது!

கேரளத்தில் 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் போலீஸார் தேடுவது தெரிந்ததும் தலைமறைவானார். அவர் குமரி மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரிந்து கேரள போலீஸார் அவரை இன்று கைதுசெய்தனர்.

கேரள மாநிலம், எர்ணாக்குளத்தில் தனியார் பள்ளியில் கடந்த 16-ம் தேதி ஆண்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சி முடிய இரவு ஆகிவிட்டது. அப்போது பள்ளியின் பிளஸ் 1 மாணவி ஒருவரிடம், அந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் கிரண் கருணாகரன்(43) வெகுநேரம் ஆகிவிட்டதால் இனி பேருந்து இருக்காது. நானே உன்னை உன் வீட்டில் கொண்டு விடுகிறேன் என சொல்லி தன் மோட்டார் சைக்கிளில் ஏறச் சொன்னார். மாணவியும், தலையாசிரியர் என்பதால் நம்பி ஏறினார்.

ஆனால் கிரண் கருணாகரன் வீட்டிற்குச் செல்லும்வழியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த மாணவி வீட்டுக்குச் சென்றதும் இதுகுறித்துத் தன் பெற்றோரிடம் சொல்லி அழுதார். உடனே தலைமையாசிரியர் கிரண் கருணாகரனை சந்தித்து, மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். உடனே கிரண் கருணாகரனும், பிளஸ் 1 மாணவிக்கு வகுப்பெடுக்கும் இரு ஆசிரியர்களும் சேர்ந்து இவ்விசயம் வெளியில் தெரிந்தால் பிராக்டிகல் மதிப்பெண்ணில் கைவைப்போம். இப்படியே விட்டுவிடுங்கள் என அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனாலும் மனம் ஆறாத மாணவி சக மாணவிகளிடம் சொல்லி அழ, இவ்விசயம் எர்ணாக்குளம் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தெரிந்தது. மாணவிகளே இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இதில் இரு ஆசிரியர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தலைமையாசிரியர் கிரண் கருணாகரன் மட்டும் தலைமறைவானார். அவரை கேரள போலீஸார் தேடிவந்த நிலையில், அவர் கன்னியாகுரி மாவட்டம், நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாகர்கோவில் வந்த கேரள போலீஸார், தலைமையாசிரியர் கிரண் கருணாகரனைக் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in