
ஆதரவற்ற நாய்கள் தத்தெடுப்புக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் அமைக்கும் பணியை கர்நாடக அரசு முன்னெடுக்க உள்ளது.
கர்நாடக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த இணையதளம் வாயிலாக அநாதரவான நாய்களையும், அவற்றை தத்தெடுப்போரையும் ஒருங்கிணைக்க இயலும். மாநில விலங்குநல வாரியம் இதற்கான பணிகளை தொடங்க உள்ளது. மாநில பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு வெளியான அறிவிப்புகளின் வரிசையிலான இந்த நவீன ஏற்பாட்டுக்கு இணையத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்காக முதல் கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதே போன்று நாய்கள் உள்ளிட்ட அநாதரவான விலங்குகளின் அரவணைப்புக்காக மொபைல் கால்நடை மருத்துவமனைகளையும் அங்கு அறிவித்துள்ளனர்.