கர்நாடக மாநிலத்தில் வணிகப் பலகைகளில் 60% கன்னடம் கட்டாயம் என்ற மசோதாவை கர்நாடக அரசு இன்று வெற்றிகரமாக தாக்கல் செய்தது.
‘கன்னட மொழி விரிவான மேம்பாட்டு திருத்த மசோதா 2024’ என அழைக்கப்படும் இந்த மசோதா, தற்போதுள்ள 2022 சட்டத்தை திருத்த முயல்கிறது. இதன்படி பெயர் பலகையின் மேல் பாதியில் இடம்பிடிப்பதோடு, சைன்போர்டுகளில் 60% இடத்தை கன்னடம் ஆக்கிரமிப்பது கட்டாயமாகிறது.
மேலும் வணிக, தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், அறக்கட்டளைகள், ஆலோசனை மையங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் ஹோட்டல்கள் என பல்வேறு துறைகளுக்கு விரிவடைய புதிய மசோதா திருத்தம் வழி செய்கிறது.
கூடுதலாக, கன்னடம் மற்றும் கலாச்சார இயக்குனரகத்தின் இயக்குனரை உறுப்பினராகவும், கன்னட வளர்ச்சி ஆணையத்தின் செயலாளரை மாநில அளவிலான குழு அமைப்பாளராகவும் நியமிக்கும் திருத்தங்களையும் மசோதா முன்மொழிகிறது. இந்த குழு, அலுவல் மொழியின் பயன்பாட்டை செயல்படுத்துவதற்கு பொறுப்பான அமலாக்க அதிகாரத்தை கொண்டு செயல்படும்.
முன்னதாக, ஜனவரி 5 ஆம் தேதி, கர்நாடக அமைச்சரவை, கன்னட மொழி விரிவான மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்யும் நோக்கில் ஒரு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, இது 60% கன்னடத்தை சைன்போர்டுகளில் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியது. இருப்பினும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அவசரச் சட்டத்தை திரும்பப் பெற்று, அரசாணையை நாடுவதற்குப் பதிலாக, சட்டமன்றத்தின் மூலம் நிறைவேற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தினார்.
மாநில மொழியைப் புறக்கணித்ததாகக் கூறி பெங்களூருவில் உள்ள வணிக நிலையங்களைக் குறிவைத்து, கன்னட குழுக்கள் நடத்திய வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த புதிய ஏற்பாட்டில் இணங்குவதற்கான காலக்கெடு பிப்ரவரி 28 என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கிலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலக்கெடுவுக்கு முன் உரிய ஏற்பாட்டை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மசோதா தாக்கலை முன்னிட்டு இன்றைய தினம் கர்நாடக சட்டப்பேரவையில் பதற்றம் ஏற்பட்டது, மாநிலத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எதிர்க்கட்சியான பாஜக கவலை எழுப்பியது. காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. பதிலுக்கு பாஜக ஆட்சி காலத்திய சட்ட ஒழுங்கு பாதிப்பு விவரங்களை காங்கிரஸ் பட்டியலிட்டதில் இருதரப்பினர் இடையேயும் பதற்றம் எழுந்து அடங்கியது.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!
நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!
‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!
கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!