ஹிஜாப்பை கழற்ற சொன்ன ஆசிரியர்கள்!- தேர்வை புறக்கணித்த மாணவிகள்

தேர்வை புறக்கணித்த மாணவி
தேர்வை புறக்கணித்த மாணவிANI

கர்நாடகாவில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதிக்க ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர். இதனால், தேர்வை புறக்கணித்துவிட்டு 10ம் வகுப்பு மாணவிகள் வீட்டிற்கு சென்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது பெரும் சர்ச்சையாக மாறிவிட்டது. மாநில அரசின் தடையால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வகுப்புக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டதோடு, பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து, 3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் அவர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் ஹஜாப் அணிந்து வந்த ஆசிரியர்களும் அதனை நீக்கிய பிறகே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை தடுத்து நிறுத்திய ஆசிரியை
ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை தடுத்து நிறுத்திய ஆசிரியைANI

குடகு மாவட்டத்தில் உள்ள நெல்லிஹுடிகேரியில் உள்ள கர்நாடக பப்ளிக் பள்ளியில் சில மாணவர்கள், ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். "நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் என் மருமகளை பள்ளிக்கு அழைத்து வருவேன். கல்வி முக்கியம். ஆனால் ஹிஜாப் எங்களுக்கு மிக முக்கியம்" என்று மாணவி கூறினார்.

உடுப்பியில் உள்ள பக்கீர்நகரில் உள்ள அரசு உருது பள்ளியில் படிக்கும் மாணவியின் பெற்றோர் கூறுகையில், "பள்ளியில் ஹிஜாப் தடை செய்யப்பட்ட பிறகு நான் அவளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதுவரை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஹிஜாப் அணிந்துதான் இந்தப் பள்ளியில் படித்துள்ளனர். ஏன்? விதிகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என கேள்வி எழுப்பினார்.

ஷிவமோக்கா நகரில் உள்ள கர்நாடகா பப்ளிக் பள்ளியில் பல மாணவிகள் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளை புறக்கணித்தனர். பள்ளி மாணவி ஹினா கவுசர் கூறுகையில், "பள்ளிக்குள் நுழையும் முன் ஹிஜாபை கழற்றுமாறு என்னிடம் கூறினர். என்னால் அதை செய்ய முடியாது என்று கூறி தேர்வு எழுதாமல் சென்றுவிட்டேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in