
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் போராடினால், அவருக்கு தமிழக பாஜக துணையாக நிற்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பாஜக-வின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, ‘’ காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாவிட்டால் முதலில் பாதிக்கப்போவது கரூர்தான். இந்நிலையில் தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் சிவகுமார், ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என மிரட்டுகிறார்.
இந்நிலையில் ஜூலை 11-ல் பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு செல்லாமல் முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும். தண்ணீர் தரவில்லை என்றால் பெங்களூர் கூட்டத்திற்கு வரமாட்டேன் என முதல்வர் அறிவிக்க வேண்டும். அப்படி கர்நாடக காங்கிரஸை எதிர்த்து நின்றால் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக பக்கபலமாக இருக்கும்’’ என்றார்.