கடல் சீற்றத்தால் கவிழ்ந்த படகு; காணாமல் போன மீனவர்: கண்ணீரில் உறவினர்கள்

சிவா
சிவா

காரைக்கால் அருகே வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து மாயமானதால் அவரது உறவினர்கள் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மணிகண்டனும் அவரது அண்ணன் மகன் சிவா(27) என்பவரும் இன்று அதிகாலை கடலுக்குள்  மீன்பிடிக்கச் சென்றனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக கடல்  சீற்றமாக காணப்பட்டது. 

இதனால் மீன்  பிடிக்க இயலாமல் இருவரும் படகைத் திருப்பிக் கொண்டு  கரை திரும்பத் தொடங்கினர். அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் இருவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். மணிகண்டன் கடலில் நீந்தியபடி தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மீனவர்கள் அவரை மீட்டு கரை சேர்த்தனர்.  சிவா கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு  மாயமானார். 

இதையடுத்து பட்டினச்சேரி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவாவை காணாமல் அவரது உறவினர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.  காரைக்கால் பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in