இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் நாயகம். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வில்லியம். இவர் உக்ரைன் நாட்டில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரி பயின்றுவந்தார். உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடந்ததால் அவரால் அங்கு தொடர்ந்து பயில முடியவில்லை. இதனால் இறுதியாண்டு மாணவரான வில்லியம் இந்தியா திரும்பினார். இங்கு ஒரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து வந்தார்.
இந்நிலையில் வில்லியம் தன் நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் இமாச்சலப்பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றார். அங்கு ஏற்பட்ட சாலை விபத்தில் வில்லியம் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து வில்லியமின் தந்தை ஆல்வின் நாயகம் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி வருகிறார். இமாச்சலப் பிரதேசத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.