14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசாக வழங்கினார்: தூத்துக்குடி வீராங்கனையை நெகிழவைத்த கனிமொழி

14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசாக வழங்கினார்: தூத்துக்குடி வீராங்கனையை நெகிழவைத்த கனிமொழி

சர்வதேச சைக்ளிங் போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனை ஸ்ரீமதிக்கு 14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்து உற்சாகபடுத்தியுள்ளார் திமுக எம்பி கனிமொழி.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. 12-ம் வகுப்பு வகுப்பு படித்து வரும் இவர், தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். இதனால், மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு சைக்ளிங் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தினால் அந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இதையடுத்து மாணவி ஸ்ரீமதி, தூத்துக்குடி மக்களைவை உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி சந்தித்து தனக்கு உதவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து மாணவிக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார் கனிமொழி. இந்த இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார் ஸ்ரீமதி.

மேலும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்துகொண்டு 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார் ஸ்ரீமதி. தற்போது இஸ்ரேலில் ஆகஸ்ட் மாதம் உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஸ்ரீமதியும் பங்கேற்கிறார். இந்நிலையில் ஸ்ரீமதிக்கு 14 லட்சம் மதிப்பிலான ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட டிராக் சைக்கிளை வாங்கி கனிமொழி எம்.பி உற்சாகப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி, தொடர் சாதனை நிகழ்த்தி வரும் ஸ்ரீமதியை இன்று நேரில் சந்தித்து அவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு உகந்த சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in