
காமராஜர் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் அவரது உருவப்படத்திற்கு மலர்மரியாதை செய்யும் வகையில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘’காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்துள்ளது. அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
எனவே 15.07.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.