கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கபடி போட்டியில் பங்கேற்று இருந்த வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்தது விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அருகேயுள்ள காசக்காரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாணிக்கம் (26). தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் மற்றும் சகோதரியுடன் மாணிக்கம் வசித்து வந்தார். கரூரில் உள்ள ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கபடி வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல கோப்பை, பரிசுகளை வென்றுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் மாணிக்கம் பங்கேற்று முதல் இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது சுற்றுப் போட்டிக்காக காத்திருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் மாணிக்கம் கூறியுள்ளார்.
அதையடுத்து அவரை அருகேயுள்ள அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குளித்தலை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.