தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 3 மணி நேரத்திற்குள் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கம் பகுதியில் பிரபல நகைக்கடையான புளூஸ்டோன் அமைந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நகைக்கடை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் அந்த நகைக் கடையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. மாடியிலிருந்து லிப்ட் வழியாகக் கடைக்குள் புகுந்து, அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதையடுத்து லாக்கரை திறக்க முயன்றபோது கடையின் உரிமையாளருக்கு செல்போனில் அலாரம் ஒலித்துள்ளது.
இதையடுத்து கடையின் ஊழியர்களை உடனடியாக வரவழைத்து கடையின் ஷட்டரை திறந்த போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. நகைக் கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், உடனடியாக கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை சேலையூர் போலீஸார் கைது செய்தனர். 18 வயதுக்கும் குறைவான அந்த வடமாநில சிறுவனிடம் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.