
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் கண்பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்.
எஸ்எம்எஸ் மருத்துவமனையின் சரக் கட்டிடத்தின் கண் வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர்களின் கண்கள் சிவக்கத் தொடங்கியதாகவும், மெதுவாக அரிப்பு மோசமடைந்து, இறுதியில் அவர்களின் பார்வை முற்றிலும் மறைந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் பார்வையிழப்பு குறித்து மருத்துவர்களிடம் புகார் அளித்தபோது, பார்வை திரும்பும் வரை பொறுமையாக காத்திருக்குமாறு அவர்களிடம் கூறியுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் ஜூன் 26 முதல் 28 வரை 74 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர், 18 நோயாளிகள் தங்கள் பார்வையை இழந்தனர். தொற்று பரவியதால் பார்வையிழப்பு ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.