‘இது ஆணவம் அல்ல, நம்பிக்கை!’ - ராகுலுக்கு ஜெய்சங்கர் பதிலடி

‘இது ஆணவம் அல்ல, நம்பிக்கை!’ - ராகுலுக்கு ஜெய்சங்கர் பதிலடி

லண்டனில் நேற்று ‘ப்ரிட்ஜ் இந்தியா’ எனும் சிந்தனை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. இந்திய வெளியுறவுத் துறை முற்றிலுமாக மாறியிருப்பதாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல உயரதிகாரிகள் தன்னி டம் தெரிவித்ததாகக் கூறிய ராகுல் காந்தி, “அவர்கள் ஆணவம் கொண்டவர்கள். எதற்கும் செவிமடுப்பதில்லை. இப்போதெல்லாம் தங்களுக்கு என்ன உத்தரவு கிடைக்கிறதோ அதையே நம்மிடம் தெரிவிக்கின்றனர்” எனக் கூறியிருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரையும், லடாக் மற்றும் டோக்லாம் பகுதிகளில் சீனாவின் அத்துமீறலையும் ஒப்பிட்டும் ராகுல் பேசினார்.

இதையடுத்து, வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் ராகுல் பேசிவிட்டதாக அவரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

ஜெய்சங்கர் ட்வீட்

இந்நிலையில் ராகுலின் கருத்துக்குப் பதிலடி தரும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். அதில், ‘ஆம், இந்திய வெளியுறவுத் துறை மாற்றம் கண்டிருக்கிறது. ஆம், வெளியுறவுத் துறை அதிகாரிகள் அரசின் உத்தரவைப் பின்பற்றுகின்றனர். ஆம், மற்றவர்களின் கருத்துகளுக்கு அவர்கள் பதிலடி தருகின்றனர். ஆனால், அதற்குப் பெயர் ஆணவம் அல்ல. அதன் பெயர் நம்பிக்கை. தேசநலனைக் காக்கும் நம்பிக்கை’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் கொள்கை என்பதைத் தாண்டி பாஜகவின் கொள்கையை இந்திய வெளியுறவுத் துறை கடைப்பிடிப்பதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

அதேபோல, ஜெய்சங்கரின் கருத்துக்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவிவகித்த சல்மான் குர்ஷித். கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிறர் கூறுவதற்குச் செவிமடுப்பதுதான் நம்பிக்கை என்று அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

பின்னணி என்ன?

உக்ரைன் போர்ச் சூழலின் பின்னணியில் இந்தியா மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஜெய்சங்கர் அவ்வப்போது எதிர்வினையாற்றிவருகிறார். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை விமர்சித்த மேற்கத்திய நாடுகளுக்கு அவர் பதிலடி கொடுத்திருந்தார்.

அதேபோல், ஏப்ரல் மாதம் இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்கா சென்றிருந்த ஜெய்சங்கர், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக வைக்கப்பட்ட விமர்சனத்துக்குப் பதிலளித்தார். முன்னதாக இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க எம்.பி இல்ஹான் ஓமர், அதுகுறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சிக்கத் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீரில் 370-வது சட்டக்கூறு நீக்கம், ஹிஜாபுக்குத் தடை உள்ளிட்ட விவகாரங்களின் அடிப்படையில் இந்தக் கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, 2+2 பேச்சுவார்த்தையின் இடையே நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, “இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துவருகிறது” என ஆன்டனி பிளிங்கன் கூறியிருந்தார். அதுகுறித்து அவர் விளக்கமாக எதையும் குறிப்பிடவில்லை. அதேசமயம், இந்திய அமைச்சர்கள் இருவரும் அதுகுறித்து அப்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “இந்தியாவைப் பற்றி தங்கள் கருத்தைக் கொண்டிருக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மனித உரிமைகள் குறித்துப் பேசப்படவில்லை. அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான விவகாரங்களில்தான் கவனம் செலுத்தப்பட்டது. ஒருவேளை மனித உரிமைகள் குறித்த விவாதங்கள் எழுந்தால், அதைப் பற்றிப் பேச இந்தியா தயங்காது” என்றார். மேலும், “அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து நாங்களும் கண்ணோட்டம் கொள்வது உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in