பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என பார்த்து கூறுமாறு லக்னோ பல்கலைக் கழக ஜோதிட துறைக்கு அறிவுறுத்திய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தடை விதித்தது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் புகாரை தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அந்த வாலிபர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. இந்த தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்தால் குடும்பத்துக்கு அழிவு ஏற்படும். இதனால்தான் அந்த பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என வாதிட்டார்.
இந்த வழக்கில், தொடர்புடைய பெண்ணும், இளைஞரும் தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறை தலைவரிடம் 10 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் எனவும், இதை ஆய்வு செய்து அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என 3 வாரங்களுக்குள் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என ஜோதிடத் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் பத்திரிக்கைகளில் செய்தியாக வந்ததை அடுத்து உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. ’பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை’ என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.